வடகொரியா சமீபகாலமாக திடீர் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகள் பதற்றமாக காணப்படுகிறது. மேலும், இதனால் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து வெளியாகிறது.
வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வடகொரியா மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது. மேலும், இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் வடகொரியாவை அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். ஆனால், வடகொரியா மீது ஏதேனும் நடந்தால் அப்போது உலகம் அழிவைச் சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்தார்.
இதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரின் இந்த மோதல்களும் அங்கன்வாடி குழந்தைகள் சண்டையிடுவதைப் போன்று உள்ளதாக ரஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கிண்டலாகத் தெரிவித்தார்.
இதில் உணர்ச்சிவசப்பட எதுவும் இல்லை. அனைவரும் இணைந்து பேச்சுவராத்தை நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அதை விடுத்து இதுபோன்று மோதல்களில் ஈடுபட்டால் அது அங்கன்வாடி குழந்தைகள் சண்டை போன்று இருக்கும். மேலும், இப்பிரச்னையை தீர்க்க முடியாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன. எனவே யாருக்கும் சார்பில்லாமல் முடிவு எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு முயற்சி மேற்கொள்ளும் நாடுகளுக்கு ரஷியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.