புத்தி பேதலித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடக்கி அவருக்குப் பாடம் புகட்டுவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சூளுரைத்தார்.
வட கொரிய அதிபரின் அறிக்கையை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டிருப்பது:
உலக நாடுகளுக்கு முன்னால் என்னையும் எனது நாட்டு மக்களையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்துவிட்டார். பயங்கரமான போர் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற முறையில் அவ்வாறு பேசியதற்கான விலையை அவர் அளித்தேயாக வேண்டும். டிரம்ப்பின் பேச்சு வெறும் பிதற்றல். அந்த புத்தி பேதலித்த கிழவரின் மிரட்டலுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்து அவரை அடக்குவேன் என்று கூறினார்.
'முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனை'
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் பைத்தியக்காரர் என்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருக்கு சோதனை ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப் தெரிவித்திருப்பது: வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங்-உன் ஒரு பைத்தியக்காரர் என்பது தெரிகிறது. அவரது நாட்டு மக்களைப் பட்டினி போடவும், அவர்களின் உயிரை பலியிடவும் அவர் தயங்காதவர் என்று தெரிகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருக்கு சோதனை ஏற்பட்டுள்ளது என்று டிரம்ப் தனது பதிவில்
தெரிவித்தார்.