சீனாவில், காய்கறி வாங்க கடைக்குச் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு சாலையோரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதிர்ஷ்டவசமாக அவ்வழியாகச் சென்ற செவிலியர் ஒருவர் கர்ப்பிணிக்கு உதவி செய்ததோடு, மிகப்பெரிய சவாலான தொப்புள் கொடியை துண்டிக்கவும் உதவினார்.
சாலையில் நடந்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவம் நடந்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கே இருந்த செவிலியர் ஹுவாங் ஜுலியன் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். பொதுமக்கள் பலரும் அப்பெண்ணுக்கு உதவினர்.
ஹுவாங் ஜுலியன், தான் அணிந்திருந்த சால்வை போன்ற ஆடையை கழற்றி, குழந்தையின் மேல் இருந்த ரத்தத்தை அகற்றி, தொப்புள் கொடியையும் துண்டித்தார். உடனடியாக தாயும், சேயும் மருத்துவமனை செல்லவும் அவர் உதவி செய்தார்.
விசாரித்ததில், அந்த பெண்ணின் பெயர் ஸெங் என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை 3.8 கிலோ எடையில் நலமாக இருந்தது. ஒரு வார காலத்துக்கு குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு சாலையோரத்தில் குழந்தை பிறந்தது இது மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.