அகதிகளை ஏற்றி வந்த படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 25 அகதிகள் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: துருக்கியிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த படகு கிரீஸ் தீவையொட்டிய கடற்பகுதியில் வியாழக்கிழமை எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்தப் படகில் பயணம் செய்தோர் நடுக்கடலில் தத்தளித்தனர்.
அப்பகுதியில் இருந்த, ஐரோப்பிய ரோந்து படகு ஆறு அகதிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. இதில், 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
படகு மூழ்கிய பகுதியில் கிரீஸ் நாட்டு கடலோரக் காவல் படை படகு மற்றும் ஹெலிகாப்படர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மேலும் 20 அகதிகள் மீட்கப்பட்டனர். படகில் பயணம் செய்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகதிகள் படகு திடீரென மூழ்கியதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.