சான் பிரான்சிஸ்கோ: உலக அளவில் புகழ்பெற்ற சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேக் டோர்ஸி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது பணிக்கு ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். அதன் நிறுவனர் ஜேக் டோர்ஸி. இவர் தற்பொழுது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ட்விட்டர் தற்பொழுது தனது பொருளாதார நிலைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது
இந்நிலையில் ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேக் டோர்ஸி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது பணிக்கு ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பங்கு வர்த்தக ஒழுங்குமுறை ஆணையதற்கு அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ட்விட்டரை ஒரு நீண்ட கால மதிப்பு வாய்ந்த நிறுவனமாக உருமாற்ற வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கும், அதன் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியாக தலைமைச் செயல் அதிகாரியான ஜேக் டோர்ஸி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது பணிக்கு ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ட்விட்டரின் ஒட்டு மொத்த பங்குகளில் 18 லட்சம் பங்குகளை ஜேக் டோர்ஸி தனது கைவசம் வைத்துள்ளார். அதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூபாய் 3450 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.