லாகூர்: பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொழில்பயிற்சிப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொழில்பயிற்சிப் பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்ப்ளோரிங் பியூச்சர் பவுண்டேஷன்' என்னும் அரசு சாரா நிறுவனம் ஒன்றின் மூலமாக இந்த பயிற்சி பள்ளி துவங்கப்பட்டுள்ளது. 'தி ஜெண்டர் கார்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளியின் வகுப்புகள் திங்கள் முதல் துவங்க உள்ளன.
இது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான மொய்சா தாரிக் கூறியதாவது:
எங்களது நிறுவனத்தில் பதிவு செய்து கொள்கிற திருநங்கைகளுக்காக நாங்கள் திறன் மேப்பாட்டு பயிற்சி வழங்கும் வகையில் பாடத்திட்டத்தினை வடிவமைத்துள்ளோம். பெரும்பாலானோர் நாகரீகம் மற்றும் அழகுத்துறை சார்ந்து அழகு சாதனப் பொருட்கள், ஆடை வடிவமைப்பு, எம்ப்ராய்டரி மற்றும் தையல் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 30 பேர் இந்த பள்ளியில் பயில பதிவு செய்து கொண்டுள்ளதாக பள்ளியின் உரிமையாளர் ஆசிப் சஷாத் தெரிவித்துள்ளார்.
ஒரு பட்டயப் படிப்பை வழங்குதன மூலம் அவர்கள் வேலை செய்யவோ அல்லது தனியாக தொழில் துவங்கவோ முடியும், இரண்டிலும் அவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனம் உதவும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் 2017-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அந்நாட்டில் 10418 திருநானகைகள் வசித்து வருகின்றனர்.