பெய்ஜிங்: பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்று இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் வகையில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேக சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இந்தியாவுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை போல் செயல்படுபவர்களை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. நாங்கள் அவர்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் சரியான பதிலடியை கொடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போருக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்று இந்தியாவுக்கு சிக்கல் உண்டாக்கும் வகையில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் குறித்த மோடியின் விமர்சனம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சங்யிங்கிடம் செய்தியாளர்களிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் பேசும் பொழுது, 'பயங்கரவாதம் அனைத்து தரப்பிற்கும் எதிரியாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட சர்வதேச சமூதாயம் இணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
பொதுவாகவே பாகிஸ்தானை பாதுகாக்கும் விதமாக சர்வதேச அரங்கில் அந்நாட்டுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிகைக்கும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.