அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரிகள் இருவர் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெக்சாஸ் மாகாணத்துக்கு உள்பட்ட ஹூஸ்டன் நகரில் உள்ள வீட்டுப் பொருள் விற்பனையகம் ஒன்றின் அருகே இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டனர்.
அப்போது, அந்த இளைஞர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காவல் துறை அதிகாரிகள் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்தில் உள்ள விற்பனையகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவரும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார்.
தாக்குதலை நடத்திய பிறகு வெள்ளை நிற டெம்போவில் அவர் தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர்.
அந்த நபர் அர்மேண்டோ லூயிஸ் என்ற 29 வயது இளைஞர் என்றும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.