பண மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு, லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, அடுத்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லண்டன் நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ வரவேற்புத் தெரிவித்துள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும், சிபிஐ அதிகாரிகளும் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.
விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்த தீர்ப்பும், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவும் லண்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யாவிட்டால், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
இந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமைந்தாலும், பிரிட்டன் சட்ட விதிகளின்படி மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர முடியாது என தெரியவந்துள்ளது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரிட்டனுக்கு தப்பியோடினார்.
இதையடுத்து, நாடு கடத்தக் கோரும் வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவருக்கு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது.
தனக்கு எதிரான வழக்கு அரசியல் ரீதியாக தூண்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நீதிபதி எம்மா ஆர்புத்நாட் விசாரித்து வந்த நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
ஆனால், சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்ற சூழலில் மல்லையாவுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக அவரது தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையே அடிப்படையாகக் கொண்டு தன்னை நாடு கடத்தக் கூடாது என்றும் மல்லையா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மல்லையாவை அடைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிறை அறை குறித்த விடியோ பதிவை நீதிபதியின் உத்தரவின் பேரில் இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதே சமயம், மல்லையா மீது குற்றம்சாட்டுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதால் அவரை நாடு கடத்துவதில் சட்ட ரீதியாக தடை ஏற்படாது என்றும் கருதப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த பவானி ரெட்டி என்ற சட்டத்துறை நிபுணர் இதுகுறித்து கூறுகையில், ""அனைத்து நடைமுறைகளும் நீதிபதிக்கு திருப்தி அளிக்கும் விதமாக இருந்தால், மல்லையாவை நாடு கடத்துவதற்கு சட்ட ரீதியான தடைகள் இருக்காது.
மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்குமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நீதிபதி பரிந்துரை செய்தாக வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்யலாம்: மல்லையாவை நாடு கடத்துமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்ததும், அதிலிருந்து 14 தினங்களுக்குள் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார்.
ஒருவேளை நாடு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மேல்முறையீட்டிலும் அது உறுதி செய்யப்பட்டாலோ, அன்றைய தினத்தில் இருந்து 28 நாள்களுக்குள்ளாக குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் நாடு கடத்தப்பட வேண்டும் என்பது பிரிட்டன் சட்ட விதிகளின்படி கட்டாயமாகும்.