நேபாளத்தில் ரூ.200, ரூ.500, ரூ.2,000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள நேபாள தொழிலாளர்களும், அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் பொதுமக்களும், வர்த்தகர்களும் தங்களது சேமிப்பு மற்றும் பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாய் நோட்டுகளை பரவலாக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ரூ.100-க்கு மேலான இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, ரூ.200, ரூ.500, ரூ.2,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான முறைப்படியான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று நேபாள தகவல், தொலைதொடர்புத் துறை அமைச்சர் கோகுல் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால், இந்தியாவில் உள்ள நேபாள தொழிலாளர்களும், அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் பெரும்பாலானவை இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்திய ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ள நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் பாதிப்பை சந்தித்தன. இதுகுறித்து இந்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நிகழாண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.200, ரூ.500, ரூ.2,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.