ஜோர்டான் மன்னருடன் மோடி சந்திப்பு

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை, தலைநகர் அம்மானில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி.
ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை, தலைநகர் அம்மானில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி.

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வெள்ளிக்கிழமை சென்றார். அந்நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை சந்தித்த மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, ஜோர்டான் தலைநகர் அம்மானில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஹானி அல்-முல்கி நேரடியாகச் சென்று வரவேற்பு அளித்தார். பின்னர், ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை மோடி சந்தித்துப் பேசினார்.
இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜோர்டான் மன்னருடன் விவாதித்ததாக சுட்டுரையில் மோடி தெரிவித்துள்ளார்.
1950-ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவுகள் இருந்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டுக்கு சென்ற இந்தியப் பிரதமர் மோடி என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் பயணத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து சனிக்கிழமை (பிப்.10) தனி விமானத்தில் மோடி பாலஸ்தீனம் செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாûஸ சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அடுத்ததாக, பாலஸ்தீனத்தில் இருந்து சனிக்கிழமை மாலையே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மாக்தெüம், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நயான் ஆகியோரை மோடி சந்திக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து துபை நகரில் அரசு சார்பில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். துபை நகரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். அவர்களிடம் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதை எடுத்துக் கூறும் அவர், இரு தரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
பின்னர், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) மாலை ஓமன் நாட்டுக்கு மோடி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமராக மோடி ஓமன் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு ஓமன் சுல்தான் அரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிறகு, அங்கிருந்து 12-ஆம் தேதி தாயகம் திரும்புகிறார்.
மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவே பிரதமர் மோடி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தனது பயணம் குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு 5-ஆவது முறையாகப் பயணம் மேற்கொள்கிறேன். இந்தப் பயணத்தின் மூலம் வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன் என்று மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com