ஹாங்காங்கில் இரட்டை அடுக்குப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஹாங்காங்கின் தாய் போ பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென்று நிலைதடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் மேற்கூரை பலத்த சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த 65 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சாலை விதிகளை மீறி விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியதற்காக, பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.