சீனாவில் ரயில் நிலையம் ஒன்றில் இருந்த எக்ஸ்-ரே சோதனை இயந்திரத்தில் தனது கைப்பை பத்திரமாக இருக்குமா என்ற கவலையால், கைப்பையுடன் தானும் அதில் இறங்கிய பெண்ணின் விடியோ வைரலாகியுள்ளது.
தெற்கு சீனாவின் டோங்குவான் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் எக்ஸ்-ரே கன்வேயருக்குள் ஒரு இளம்பெண் நுழைந்த காட்சியைப் பார்த்ததும், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடைமைகளை சோதிக்கும் எக்ஸ்-ரே இயந்திரத்துக்குள் ஒரு சிறிய கைப்பையுடன், இளம் பெண்ணும் நுழைந்து வெளியேறிய விடியோவை பல லட்சம் பேர் பார்த்து பகிர்ந்துள்ளனர். அப்படி அந்த பையில் அந்த பெண் என்னதான வைத்திருந்தார் என்பது தெரியாத போதும், அவர் தனது பொருளைப் பற்றி கவலைப்பட்டாரே தவிர, எக்ஸ்-ரே இயந்திரத்தில் இருந்து வரும் அதிகப்படியான கதிர்வீச்சினால் தனது உடல் பாதிக்கப்படும் என்பதை மறந்துவிட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறுகிறார்கள்.
மேலும், இதுபோன்று எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்துக்குள் மனிதர்கள் யாரும் நுழைய வேண்டாம் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.