கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற இணையதள ஊடுருவல் தாக்குதல் பின்னணியில் ரஷியா இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இணையதள ஊடுருவல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரஷிய ராணுவம், அதிக அழிவு மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான "நாட்பெட்யா' என்ற இணையதள ஊடுருவல் தாக்குதலை மேற்கொண்டது.
இது, உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அதன் முக்கியமான உள்கட்டமைப்புகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், அவற்றின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித்து போனதுடன், பெரும் அளவில் பொருளிழப்பும் ஏற்பட்டது.
இந்த இணைய ஊடுருவ தாக்குதலால் மட்டும், ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பல்லாயிரம் கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
எனவே, பொறுப்பற்ற வகையில், கண்மூடித்தனமாக இந்த இணையதள ஊடுவல் தாக்குதலை நிகழ்த்தியதற்கு அந்த நாடு சர்வதேச விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.