லாஸா: திபெத்தின் தலைநகரில் அமைந்துள்ள 1300 வருட பழமையான புத்த மடாலயத்தில் ஞாயிறன்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திபெத்தின் தலைநகர் லாசாவில் 'ஜோகாங்' என்ற பழமையான புத்த மடாலயம் உள்ளது. இது புத்த மதத்தினருக்கான் புனித கோவிலாகவும் கருதப்படுகிறது. 1,300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவிலானது, கடந்த 2000ம ஆவது வருடம் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய தலம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜோகாங் கோவிலில் சனிக்கிழமை இரவு திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அபபகுதியில் கடும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் ஏதும் தெரியாத நிலையில், முழுமையான சேத விவரங்களும் வெளியாகவில்லை. இதன் காரணமாக கோவிலின் ஸ்திரத்தன்மை பற்றிய அச்சம் எழுந்துள்ளது.
பலநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வந்து செல்லும் இந்தக் கோவிலில், புத்தரின் சிறுவயது உருவ சிலை உள்பட பல்வேறு கலாச்சார பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.