வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவத் தளம் ஒன்றுக்கு வந்த மர்ம கடிதத்தினை பிரித்துப் பார்த்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் ஆர்லிங்டன் நகரில் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அஞ்சல் உறையுடன் அனுப்பப்பட்டு உள்ளது. அதன் உள்ளே மர்ம பொருள் ஏதோ இருந்துள்ளது.
அந்த கடிதத்தினை அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் வாங்கிப் பிரித்துள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட மாற்றத்தினால் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ஒரு அசவுகரியமான உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த 11 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.
உடனடி பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களில் மிகவும் சோர்வாக உணர்ந்தவர்கள் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்பொழுது அவர்களது நிலைமை சீராக உள்ளது என்று ராணுவத் தளத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.