அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான், பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமா-உத்-தாவா, ஃபலா-ஏ-இன்சானியாத் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அந்த 2 அமைப்புகளுக்கும், பாகிஸ்தானில் நன்கொடை திரட்ட அந்நாட்டு அரசு கடந்த திங்கள்கிழமை தடை விதித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிதியுதவி பெற்றுக் கொண்டு, பாகிஸ்தான் ஏமாற்றுவதாகவும், இதனால் அந்நாட்டுக்கு இனி நிதியுதவி செய்யப்பட மாட்டாது என்றும் சுட்டுரையில் பதிவு வெளியிட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் இந்நடவடிக்கையை எடுத்தது. இதேபோல், ஐ.நா.வால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான், பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜமாத்-உத்-தாவா, ஃபலா-ஏ-இன்சானியாத் ஆகிய அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமில்லை. விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னரே, சயீதின் அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது அவசர கதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் அந்த அமைப்புகள் இருக்கின்றன. அதனால்தான் அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, எங்களது குழந்தைகள் இனிமேல் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக சென்று வர முடியும்.
இந்த அமைப்புகளோடு தொடர்புடைய நபர்கள், வரும் காலத்தில் பாகிஸ்தான் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுப்பதை எங்களது அரசு விரும்பவில்லை என்று தஸ்தகீர் கான் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானை ஆளும் பிஎம்எல்-என் கட்சி தலைமையிலான அரசு, ஜமா-உத்-தாவா, லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவற்றால் நடத்தப்படும் அறக்கட்டளைகளை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுபோல், அந்த அறக்கட்டளைகள் பாகிஸ்தான் அரசால் கையகப்படுத்தப்பட்டால், லாகூர் அருகே முரித்கியில் உள்ள தனது தலைமையகத்தை ஜமா-உத்-தாவா அமைப்பு இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.