பனாமா ஆவண ஊழல்: சிறைத் தண்டனையை எதிர்த்து நவாஸ் மேல்முறையீடு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பனாமா ஆவண ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு
பனாமா ஆவண ஊழல்: சிறைத் தண்டனையை எதிர்த்து நவாஸ் மேல்முறையீடு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பனாமா ஆவண ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த மூவரும் தாக்கல் செய்த அந்த மனுக்கள் மீதான விசாரணை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஜியோ நியூஸ்' ஊடகம் திங்கள்கிழமை கூறியதாவது:
லண்டன் அவென்ஃபீல்டு முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் சஃப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனைகளை எதிர்த்து, அவர்களது சார்பில் தனித்தனியாக 7 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 3 மனுக்கள் நவாஸ் ஷெரீஃப் சார்பிலும், தலா 2 மனுக்கள் மரியம் மற்றும் சஃப்தார் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவென்ஃபீல்டு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் சட்டக் குறைபாடுகள் உள்ளதால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவற்றின் மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமை மேற்கொள்கிறது.
இதுதவிர, பனாமா ஆவண ஊழல் தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடைபெற்று வரும் மற்ற இரு வழக்கு விசாரணைகளையும் வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஜியோ நியூஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.
அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பதை விசாரிக்கும்படி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித் தனியாக 3 வழக்குகள் நடைபெற்று வந்தன.
இவற்றில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, முகமது சஃப்தார் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், லண்டனிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை லாகூர் திரும்பிய நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் உடனடியாக கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com