அணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை

வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.
வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.

வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது. 
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. 
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்காவும், வட கொரியாவும் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் சில நாள்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.
டிரம்ப்பும், அதிபர் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் பேசி மேற்கொண்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு இருவரும் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும். வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்க இரு தரப்பினரும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப்பும், கிம் ஜோங்-உன்னும் தாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், சர்வதேச சமுதாயம் அதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாகக் கூறியதாவது:
அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியாவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது. 
இந்தப் பேச்சுவார்த்தையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் நாங்கள் விதித்துக் கொள்ளவில்லை. மேலும், அணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு எதையும் நாங்கள் விதிக்கவும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com