கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்லிடப்பேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார். முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணையதள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017-இல் ஏற்கெனவே ரூ.19 ஆயிரம் கோடிஅபாரதம் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
இணையதளத்தில் பொருள்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.