ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய இந்தியா முழு ஒத்துழைப்பு: பிரதமர் மோடி
குயிங்டாவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள குயிங்டாவோ நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மண்டல தொடர்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் மீது மரியாதை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கும் வகையிலான செக்யூர் (SECURE) என்ற கொள்கையை முன்வைத்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:
புவியியலின் வரையறையை டிஜிட்டல் தொடர்பு மாற்றி வருகிறது என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். ஆகவே, நமது அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு மண்டல பகுதிகளில் உள்ள நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நமது கலாசார பகிர்வை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பு மடங்காக்கலாம். இதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உணவு திருவிழா மற்றும் புத்த திருவிழா ஒன்றையும் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.