புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்ட நிரவ் மோடி, தற்போது பிரிட்டன் அரசிடம் 'அரசியல் அடைக்கலம்' கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் உறுதி அளிப்புக் கடிதங்கள் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை
இந்த மெகா மோசடி தொடர்பாக பி. என்.பி வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரைத் தொடர்ந்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோருக்குச் சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ளது குற்றப்பத்திரிகையில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி, மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் உஷா அனந்தசுப்பிரமணியன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்ட நிரவ் மோடி, தற்போது பிரிட்டன் அரசிடம் 'அரசியல் அடைக்கலம்' கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது
முன்னதாக நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணமாக 'அரசியல் ரீதியிலான துன்புறுத்தல்' காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தைச் சுட்டிக்காட்டி 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிக்கையில் செய்தி வெளியியாகியுள்ளது.
அதேசமயம் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் முறைப்படி வலியுறுத்துவது தொடர்பாக, சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .