பாக்தாத்: ஈராக்கில் சதாம் உசேன் வாழ்ந்து வந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு மேற்கே ரத்வானிய அரண்மனையில், 1979-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை சதாம் உசேன் வாழ்ந்து வந்தார். அமெரிக்க எதிர்ப்பால் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சதாம் உசேன், 2003-ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின்னர் அவரது ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது.
இதையடுத்து திக்ரித் நகருக்கு அருகே பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன், அதே ஆண்டின் டிசம்பர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது மனித உரிமை மீறல் வழக்குகள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அவர் தூக்கில் போடப்பட்டார்.
இந்நிலையில், பாக்தாத் நகரின் மேற்கே ரத்வானிய அரண்மனையில் வாழ்ந்து வந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈராக் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த பாக்தாத் மாநில அரசு சொத்துக்கள் துறையின் இயக்குநர் அகமத் அல்-ரூபாயே கூறுகையில், ரத்வானிய அரண்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அமெரிக்க பல்கலைக்கழகம் நிறுவதற்கு அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ரத்வானியா அரண்மனை முன்னாள் அதிபர் குடும்பத்திற்கு ஒரு முக்கிய வசிப்பிடமாக இருந்தது என்பதும் சதாம் உசேனுக்கு சொந்தமான அரண்மனைகள் மற்றும் பிற சொத்துக்களை தற்போது அரசு கைப்பற்றி உள்ளது. .
சமீபத்தில் சதாம் உசேன் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என 4,200க்கும் மேற்பட்டோர்களிடம் இருக்கும் சொத்துக்களை கைப்பற்ற அரசு உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மாதம் ஈராக் உயர் கல்வி அமைச்சர் அப்துல் ராசிக் ஈஸா, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு அமெரிக்க தூதுவரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.