பாரீஸ்: தேர்தல் பிரசாரத்திற்கு முன்னாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான முகமது கடாபியிடம் இருந்து நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி (வயது 63). கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது தேர்தல் பிரசாரத்திற்காக அப்பொழுது லிபிய அதிபராக இருந்த முகமது கடாபியிடம் இருந்து நிகோலஸ் சர்கோசி பெருமளவில் பணம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.
சர்கோசியின் தேர்தல் பிரசாரத்திற்கு நிதியுதவி வழங்கினோம் என்று லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி மற்றும் அவரது மகன் செய்ப் அல் இஸ்லாம் ஆகிய இருவரும் புகார் கூறியிருந்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சர்கோசி நிராகரித்து விட்டார்.
பின்னர் இதுபற்றிய வழக்கு 2013ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சர்கோசியின் முன்னாள் உதவியாளர் அலெக்சாண்டிரி டிஜோஹ்ரி, அவரது அமைச்சரவை சகாவான பிரைஸ் ஹார்டிபியூயெக்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு சர்கோசி தற்பொழுது வரை பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் முகமது கடாபியிடம் இருந்து நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.