தெஹ்ரான்: ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் மீது கடந்த 2015-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்கும் ஆயுதங்களின் பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கான தனியான அணு ஆயுத ஒப்பந்தம் முடிவான பின் அந்நாடு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பரவலாக குறைந்தது. இதற்காக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆயினும் இந்த ஒப்பந்தத்தில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை திட்டம் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத விசயங்களை சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் பதவியேற்ற பின், தொடர்ந்து ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். செவ்வாயன்று அவர் ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று தன்னிச்சையாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஈரான் மூத்த தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரான் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:
ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இருந்தாலும் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கூறியுள்ளன. மேலும் தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் என இந்நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.
வர்த்தக உறவுகளை தொடர்வோம் என்று ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு தீர்க்கமான உத்தரவாதம் அளிக்காவிட்டால், சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.