நைரோபி: கென்யாவின் நகுரு கவுண்டி மாகாணத்தில் புதனன்று அணை உடைந்த விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பலியாகினார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நகுரு கவுண்டி மாகாணத்தில் படேல் என்ற அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டுவின் பாதுகாப்பு மதகுகள் புதனன்று மாலை உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் அதிக வேகத்தில் வெள்ளமாக பாய்ந்து வெளியேறியது.
இந்த தண்ணீர் பாய்ச்சலில் அணையின் கரையோரம் இருந்த நுற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை 27 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.