இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்ற புகார்களுக்கு உரிய பதிலளிக்கும் வகையில் சிறப்பு சர்வதேச இயக்குநரகம் ஒன்றை அந்நாட்டு ராணுவம் அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது இலங்கை ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு உரிய பதிலளிக்கும் வகையிலான தகவல்களை திரட்டும் வகையில் இந்த இயக்குநரகம் கடந்த மாதம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே கூறுகையில், 'எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்கும் வகையில் எங்களுக்கென ஓர் அமைப்பு உள்ளது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க எதிர்நோக்கியுள்ளோம். ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக, ஒட்டுமொத்த ராணுவத்தையும் குற்றம் கூற இயலாது. ஐநா அமைதிப் படை வீரர்களாக பணியாற்றும் வீரர்களையும் அந்த சிறப்பு சர்வதேச இயக்குநரகம் கண்காணிக்கும்' என்றார். ஐநா அமைதிப் படை வீரர்களாக செயல்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார்கள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு இலங்கையை பொறுப்புடையதாக்கும் வகையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது.
அத்துடன் போர்க் குற்றம் தொடர்பாக விசாரிக்க சர்வதேச விசாரணை அமைப்பையும் ஐநா ஏற்படுத்தியது.