பாரீஸ் நகரில் அமைந்துள்ள பாலைஸ் கார்னியர் ஒபேரா மாளிகைக்கு அருகில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அவ்வழியாகச் சென்ற பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தினான்.
கத்தியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறை அந்த பயங்கரவாதியை கைது செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
பாரீஸ் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாடும் விழித்துக்கொண்டு அதன் அருகில் நடப்பது குறித்து சற்று ஆராய வேண்டும். இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடுஞ்செயல்கள் அழிக்கப்பட வேண்டியவை.
பயங்கரவாதம் குறித்த நமது பார்வை மாற வேண்டும். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்றார்.