அமெரிக்கா
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் பதவிக்கு, தற்போதைய இணை இயக்குநர் கீனா ஹாஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் சிஐஏ-வின் முதல் பெண் இயக்குநர் ஆகிறார்.
பிரிட்டன்
ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் ஆப்கன் ராணுவத்துக்கு ஆலோசனையும், பயிற்சியும் அளித்து வரும் தங்கள் நாட்டு ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை 600-லிருந்து 1,000-ஆக அதிகரிப்பது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருகிறது.
ஹாங்காங்
ஹாங்காங்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டியதாக ஜனநாயக ஆதரவு தலைவர் எட்வர்ட் லீயங் (26) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. இதன் மூலம், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
எகிப்து
புனித ரமலான் மாதத்தையொட்டி, காஸாவையொட்டிய தனது ரஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலம் மூட்பட்டிருந்த அந்த எல்லை, துன்பங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா
கடந்த 2016-இன் தற்கொலைத் தாக்குதல் உள்பட இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்படும் மதகுரு அமன் அப்துர்ரஹ்மானுக்கு மரண தண்டனை விதிக்குமாறு அந்த நாட்டு அரசு நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா
சிட்னியில் காவல் நிலைய ஊழியரை கடந்த 2015-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவனுக்கு துப்பாக்கி வழங்கிய குற்றத்துக்காக, ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர் தலால் அலாமெதீன் (25) என்பவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 17 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.