மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் உயிர்க்கொல்லி எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
காங்கோ குடியரசின் தென்மேற்கே அமைந்துளள ஈக்வேடூர் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக எபோலா நோய் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அந்த நோய்க்கு மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, எபோலாவால் அண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 4 பேருக்கு எபோலா அறிகுறிகள் கண்டறியப்பட்டதாகவும், இத்துடன் அந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 21 பேருக்கு எபோலா நோய் இருப்பது உறுதியாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.