டோரோண்டா: கனடாவின் மிஸ்ஸிசவுகா நகரத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் ஆறாவது பெரிய நகரம் மிஸ்ஸிசவுகா. இங்கு ”பாம்பே பேல் என்னும் பெயரில் இந்திய உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் வியாழன் இரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அதேசமயம் உணவகத்தினுள் குண்டு வைத்தவர்கள் என இருவரின் புகைப்படங்கள் அங்குள்ள சிசிடிவி பதிவில் இருந்து எடுக்கப்பட்டு போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் தற்பொழுது போலீசாரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.