உலகின் முதல் மிதவை அணுமின் நிலையமான அகாதெமிக் லோமேனோசேவ் ரஷியாவின் முர்மன்ஸ்க் நகருக்கு தனது முதல் பயணத்தை அண்மையில் மேற்கொண்டது. இரு அணு உலைகளைக் கொண்டுள்ள இந்த பிரமாண்ட அணுஉலைக் கப்பல் மூலம் தொலை தூரத்தில் உள்ள நகரங்களுக்கும், தீவுகளுக்கும் தடையற்ற மின்சார வசதியை அளிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதி பெறுவார்கள். அணுசக்தி தொழில்நுட்பத்தின் அதிசயமாகக் கருதப்படும் இந்தக் கப்பலால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும் என்று ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரித்துள்ளனர்.
தயாரிப்பு
அகாதெமிக் லோமேனோசேவ்- ரஷிய அணு சக்தி நிறுவனத்தின் (ரஷ்ஆட்டோம்) நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும். இதுவே உலகின் முதல் மிதவை அணுமின் நிலையம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷிய விஞ்ஞானி மிகைல் லோமேனோசேவை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நோக்கம்
மின்சார வசதியை எளிதில் கொண்டு சேர்க்க முடியாத தொலைதூர தீவுப் பகுதிகள், கடற்கரை ஒட்டிய நகரங்களுக்கு மின்சார வசதி அளிப்பதுதான் இந்த மிதவை அணுமின் நிலையத்தின் முக்கிய நோக்கமாகும்.
பயணம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கட்டமைக்கப்பட்ட இந்த மிதவை அணுமின் நிலையம், மூன்று வாரப் பயணத்துக்குப் பிறகு முர்மன்ஸ்க் நகரை அடைந்தது.
மின் உற்பத்திக்குத் தேவையான அணு எரிபொருள்கள் முர்மன்ஸ்க் நகரில் வைத்து இந்த அணுமின் நிலையத்தில் ஏற்றப்பட்டன.
பின்னர் அங்கிருந்து நாட்டின் கிழக்குக் கோடியில் உள்ள பிவிக் நகருக்கு பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்த நகரில் இருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் 86 கி.மீ. தொலைவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிவிக் நகரைச் சென்றடைந்த பிறகு அங்குள்ள மின் பகிர்மானத் தொகுப்புடன் மிதவை அணுமின் நிலையம் இணைக்கப்படும். அதன் பிறகு உலகில் முதல்முறையாக செயல்பாட்டுக்கு வந்த மிதவை அணுமின் உற்பத்தி நிலையம் என்ற பெருமையையும் இது பெறும்.
பயன்கள்
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலைகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதனை மிதக்கும் செர்னோபில் என்றே அழைக்கின்றனர். 1986-இல் ரஷியாவின் செர்னோபில் அணுமின் நிலையதத்தில் உலகின் மோசமான அணு உலை விபத்து ஏற்பட்டது.
இந்த மிதவை அணு மின் நிலையத்தில் ஏதாவது பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால் பெரிய அளவில் சுனாமிகளும், சூறாவளிகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. கடலில் அணு கதிர் வீச்சு கலந்தால் கற்பனை செய்துபார்க்க முடியாத பாதிப்புகளும் ஏற்படலாம்.