சிட்னி: தனது பண்ணையாளரின் மேல் இருந்த ஆத்திரத்தில் ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசி வைத்தக் குற்றச்சாட்டின் கீழ் ஸ்ட்ராபெரி பண்ணையின் மேற்பார்வையாளராக இருந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசி இருந்த விவகாரம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் தொழிற்சாலைப் பணிகளையும் இது பெரிய அளவில் பாதித்தது.
இந்த நிலையில், மை உட் டிரின் என்ற பெண்மணியை காவல்துறையினர் கைது செய்து, ஸ்ட்ராபெரி பழங்களுக்குள் ஊசியை வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அவரது பண்ணையாளர் மீதான கோபம் காரணமாகவே இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் உண்மையைச் சொல்லும் வரை பெயில் கிடையாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசியை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண் குற்றவாளியை நீண்ட விசாரணைக்குப் பிறகு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊசி சொருகிய ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டதன் விளைவாக 100-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுப்போருக்கு போலீஸார் தரப்பில் வெகுமதிகளும் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், மிகவும் சிக்கலான விசாரணைகளுக்குப் பிறகு, ஸ்ட்ராபெரியில் ஊசியை வைத்தது தொடர்பாக 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது தீங்கிளைக்கும் விதமாக உணவுப் பொருளை பாழ்படுத்தியது தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.