ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் ஐ.எஸ். ஆதரவாளர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட் டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: சோமாலியா நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஹஸன் காலிஃப் ஷைர் அலி (30) கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளியன்று, நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் ஹஸனை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருத்தில் கொண்டு போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் ஐ.எஸ். ஆதரவாளர் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையே நிச்சயம் தொடர்பு உள்ளதா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது இது முன்னரே திட்டமிடப்பட்ட செயல் அல்ல என்பதை விசாரணை அதிகாரிகளால் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.