முதலாம் உலகப் போர் நிறைவு பெற்று நூறாண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார்.
பிரான்ஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாகப் புறப்பட்டார்.
தலைநகர் பாரீஸில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னத்தை அவர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
முதலாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இந்த போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலாம் உலகப் போர் நிறைவு பெற்று நூறாண்டு ஆனதையொட்டி, பாரீஸில் உள்ள ஆர்க் டே ரியோம்பில் அந்நாட்டு அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நாயுடுவை வரவேற்றார்.
அங்கு, டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை வெங்கய்ய நாயுடு சந்தித்து கலந்துரையாடினார்.
முதலாம் உலகப் போரில் இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 1.8 கோடி பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, "போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். 8 லட்சம் இந்திய வீரர்கள் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். பல வீரர்கள் காயமடைந்தனர்.
வீரதீர செயலுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகள் 12 உள்பட 13ஆயிரம் பதக்கங்கள் நமது வீரர்களுக்கு கிடைத்துள்ளன. முதலாம் உலகப் போரால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது' என்று வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.