ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹீமி கூறியதாவது:
தலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காபூலில் சிறுபான்மை ஹஸாரா இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவர்களைக் குறிவைத்து வந்த தற்கொலைப் படை பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, அந்த பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என்றார் அவர்.
இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாஹித் மஜ்ரோ தெரிவித்தார்.