சிட்னி: பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 ஆயிரம் குழந்தைகளை பாதுகாக்கத் தவறியமைக்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்த விரிவான ஆய்வொன்று கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த ஆய்வின் முடிவில் சுமார் 17 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொல்லைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன், இவ்வாறு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் திங்களன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நம் தேசத்தின் குழந்தைகள் ஏன் காக்கப்படவில்லை? ஏன் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது? அவர்களின் அழுகை ஏன் புறக்கணிக்கப்பட்டது? நீதியின் கண்கள் ஏன் பார்க்க மறுத்தது? இதுகுறித்து செயல்பட நமக்கு இவ்வளவு காலம் தாமதமானது ஏன்? பாதிப்புக்குள்ளான அப்பாவிக் குழந்தைகளை பாதுகாப்பதை விட நமக்கு வேறு என்ன முக்கிய பணி இருந்தது?
இவ்வாறு தொடர்ந்து அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி உணர்ச்சிமயமாகப் பேசிய அவர் பின்னர் குழந்தைகளிடம் மன்னிப்பு கோரினார்.