இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக, அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.
இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் குழந்தைகள் நல இணையமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் ஜாஃப்னா பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், "வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதனால், இங்குள்ள பெரும்பாலான மக்கள் விடுதலைப்புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றனர்' என்று விஜயகலா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், விஜயகலா நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்துப் பேசிய பின், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக விஜயகலா அறிவித்தார்.
இருந்தபோதிலும், மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அட்டர்னி ஜெனரலிடம் பல்வேறு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஆராய்ந்த அவர், மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிய குற்றத்துக்காக, விஜயகலா மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், "இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்னைகளை யார் கூறினாலும், அவர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே அனைவரும் கருதுவர்.
என்ன நடந்தாலும், மக்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து, அதைத் தீர்க்க தொடர்ந்து போராடுவேன். மக்களின் நலனுக்காகவே எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தேன்' என்று விஜயகலா தெரிவித்துள்ளார்.