இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெங்கய்ய நாயுடு, சிகாகோ நகரில் அமெரிக்க வாழ் தெலுங்கு மக்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றினார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தனது தாய்மொழியான தெலுங்கில் வெங்கய்ய நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சுணக்கமடைந்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் மட்டும் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், சர்வதேச சமூகம் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்பதற்கு முன்பு நான் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது, சுமார் 40 வெளிநாட்டுத் தூதர்கள் வரை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சி குறித்து பேசியதுடன், பல்வேறு துறைகளில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டினர். இவை அனைத்துக்கும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான் காரணம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார ரீதியாக பல சாதனைகளைப் படைத்துள்ளது. உள்நாட்டிலும் மக்கள் நலத் திட்டங்கள் பல சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க வாழ் தெலுங்கு மக்கள் அனைவரும் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்று அவர்களும் பலனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அரசு முறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்ட பயணமாகவே வெங்கய்ய நாயுடு அமெரிக்காவுக்கு வந்துள்ளார். சிகாகோவில் நடைபெற்று வரும் உலக ஹிந்து மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியிலும் அவர் உரையாற்ற இருக்கிறார்.