பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்ஸும் (68) உடல் நலக் குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
பனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி பேகம் குல்ஸும் நவாஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை லண்டனிலிருந்து பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன. லாகூர் ஜதி உம்ராவில் உள்ள ஷெரீஃபுக்கு சொந்தமான இல்லத்தில் குல்ஸும் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்ஸும் இறுதி சடங்குகளை மேற்கொள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ், அவரது மகள் மரியம் மற்றும் அவரது மருமகன் முகமது சஃப்தார் ஆகியோர் ஒரு நாள் பரோலில் வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குல்ஸுமின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள ஷெரீஃபின் குடும்பத்தினர் மூன்று நாள்கள் பரோல் கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டுமே பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, லண்டனிலிருந்து குல்ஸும் உடலை கொண்டு வருவதற்காக அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகளுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், குல்ஸும் இறுதி சடங்கில் அவரது மகன்களான ஹஸன், ஹுசைன் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.