நியூயார்க்: ஐ.நா சபை கூட்டத்தில் தனது மூன்று மாத பெண் குழந்தையுடன் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டேர்ன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா அர்டெர்னுக்கு தற்போது 38 வயதாகிறது. அந்நாட்டின் வரலாற்றிலேயே இளம் வயதிலேயே பிரதமரான பெண் இவர்தான். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கிளார்க் கேஃபோர்ட்டை (Clarke Gayford) திருமணம் செய்துள்ள ஜெசிந்தா, கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிரதமர் பதவியில் உள்ள போது, குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஆவார். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்த போது, குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்டெர்ன் தமபதியினர் தங்களது குழநதைக்கு நீவ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையை கவனித்துக் கொள்ள 6 வாரங்கள் பேறுகால விடுப்பு எடுத்திருந்த ஜெசிந்தா தற்போது தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஐ.நா சபை கூட்டத்தில் தனது மூன்று மாத பெண் குழந்தை நீவுடன் கலந்து கொண்ட ஜெசிந்தா அர்டேர்ன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட அரங்கில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து சார்பாக அந்நாட்டின் பிரதமரான ஜெசிந்தா அர்டேர்ன் கலந்து கொண்டார். அவர் தன்னுடன் தனது மூன்று மாத பெண் குழந்தை நீவையும் அழைத்து வந்திருந்தார். அவர்களுக்குத் துணையாக கணவர் கிளார்க் கேஃபோர்ட்டும் வந்திருந்தார்.
கூட்ட அரங்கில் ஜெசிந்தா குழந்தை நீவை அணைத்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் இருந்தார். நீவை கையில் வைத்துக் கொண்டே அவர் அந்த மாநாட்டிலும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த செய்கை அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
கூடுதலாக குழந்தை நீவுக்கு வழங்கப்பட்டிருந்த 'நியூசிலாந்தின் முதல் (பிரதமர் குடும்பம்) குழந்தை' என்னும் பொருள்படும்படியான அடையாள அட்டையுடன், கிளார்க் கேஃபோர்ட் புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.