லாபம் தரும் ஜாதிமல்லி!

மலர் சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகள் ஜாதி மல்லி சாகுபடி செய்து, லாபம் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
லாபம் தரும் ஜாதிமல்லி!

திருநெல்வேலி: மலர் சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகள் ஜாதி மல்லி சாகுபடி செய்து, லாபம் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
 ரகங்கள்: கோ 1, கோ 2 இளஞ்சிவப்பு நிற மொட்டுகள் கொண்ட ரகங்கள் சிறந்தவை.
 மண்: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண், வண்டல் மண் ஏற்றது.
 களர், உவர் நிலங்கள் உகந்தவை அல்ல. போதிய அளவு வசதி, சூரிய வெளிச்சம் இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை.
 பருவம்: ஜூன் - நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம்.
 நிலம் தயாரித்தல்: நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழுது 30 செ.மீ. நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆறவிடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்இடவேண்டும்.
 பதியன் தயாரிப்பு: பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை கத்தியால் தண்டின் ஒரு பகுதியில் லேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர், அத்தண்டை வளைத்து வெட்டிய பாகத்தை மண்ணில் புதைக்கவேண்டும். பிறகு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
 சீவப்பட்ட பகுதியிலிருந்து சல்லி வேர் தோன்றும். 3 மாதம் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவுக்கு பயன்படுத்தலாம். நுனிக்குச்சிகளைப் பதியன்களாகத் தயாரித்து பனி அறையில் நட்டு எளிதில் வேர் பிடிக்கச் செய்யலாம்.
 வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம், இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர்பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாளில் வேர் தோன்றும்.
 நடவு: வேர் வந்த பதியன்களை தாய்ச் செடியிலிருந்து பறித்ததும் குழியின் மத்தியில் நடவேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் நடவேண்டும்.
 ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: செடிக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை ஆண்டுக்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும்.
 டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின் ஒருமுறையும், பின்பு ஜூன் - ஜூலை மாதங்களில் ஒருமுறையும் இடவேண்டும்.
 உரமிடும்போது செடியிலிருந்து 30 செ.மீ. தள்ளிவிட்டு நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு தேவையான அளவு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
 கவாத்து: செடிகளை ஆண்டுக்கு ஒருமுறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்யவேண்டும். தரையிலிருந்து 45 செ.மீ. உயரம் வரை வெட்டிவிடவேண்டும். செடிகளை குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். படரவிடக்கூடாது.
 செடிகள் நட்டு ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும். ஒரு ஹெக்டருக்கு இடவேண்டிய சத்துகளை பரிந்துரைப்படி இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகளையும் இட வேண்டும்.
 நீர் நிர்வாகம்: 10 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.
 ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: மொட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
 சிவப்பு சிலந்திப் பூச்சி: இவ்வகை பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பாதிக்கப்பட்ட இலைகள் பழுத்து வெண்மையான வலை பின்னியதுபோல் காணப்படும்.
 இதைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
 இலை வண்டு: இந்த வண்டுகள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் மஞ்சள் நிறமாகிப் பின்னர், பழுத்து உதிரும். மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
 இலைப்புள்ளி நோய்: ஜாதிமல்லியை அதிகம் தாக்கி சேதமேற்படுத்துவது இலைப்புள்ளி நோய். ஆரம்பத்தில் இலைகளில் சிறுசிறு கரும்புள்ளிகள் தோன்றி பிறகு இலை முழுவதும் பரவும். தாக்கப்பட்ட இலைகள் தீயால் கருகியதுபோல் காட்சி அளிக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
 அறுவடை: செடிகள் நட்ட ஓராண்டிலேயே பூக்கத் தொடங்கும். இருப்பினும் 2ஆம் ஆண்டிலிருந்துதான் சீராக மகசூல் கொடுக்கும். மொக்குகள் விரியும் முன்னதாகவே காலையில் பறிக்கவேண்டும். வாசனை எண்ணெய் தயாரிக்க மொக்குகள் மலர்ந்த பின்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.
 மகசூல்: ஹெக்டேருக்கு 11 டன் பூ மொக்குகளை விளைச்சலாகப் பெறலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com