காய்கறிகள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் குறுகிய காலத்தில் உடனடி பலனைப் பெற வெண்டை சாகுபடியில் ஈடுபடலா ம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. நடவு செய்த 45-ஆவது நாளில் அறுவடைக்கு வந்துவிடும் வெண்டையால் மகசூலும், வருவாயும் இரட்டிப்பாகும்.
கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
வெண்டை கோ.பி.ஹெச் 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு மற்றும் பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகமாகும். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்ற வகை. பழமானது அடர் பச்சை, இளம், குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும்.
கோ 1 (1976): இது ஹைதராபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான இரகம். பழமானது இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூலான 90-ஆவது நாளில் 12 டன் கிடைக்கும்.
கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகமாகும். மகசூல் 16 முதல் 18 டன் கிடைக்கும்.
கோ 2 (1987): இது ஏ.ஈ 180 மற்றும் பூசா சவானியன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகமாகும். பழத்தின் பரப்பானது குறைந்த முடிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், சந்தைக்கு சிறந்ததாகவும் உள்ளது. பழமானது நீளமாக 7-8 மேடுகள் கொண்டது. 90 நாள்களில் 15 முதல் 16 டன் மகசூல் தரவல்லது.
வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும்.
குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். ஜூன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடவு செய்யலாம். ஹெக்டேருக்கு 7.5 கிலோ விதை போதுமானது. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழுதிடவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்: விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.
நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு, இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும். நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.12 கிலோ இடவேண்டும்.
நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும். நடவு செய்த 45 நாள்களிலேயே காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். காய்கள் முற்றுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது அவசியமானது. ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 15 டன்கள் வரை காய்கள் கிடைக்கும்.