மக்காச்சோளத்தின்  விலை குறைய வாய்ப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

பருவ மழையால் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்காச்சோளத்தின்  விலை குறைய வாய்ப்பு: வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

பருவ மழையால் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை, விவசாய நல அமைச்சகத்தின் நான்காவது முன்கூட்டிய மதிப்பீடு 2018- 19-ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்காச்சோளம் 93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.72 கோடி டன் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கிறது. 
இந்தியாவில், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், பிகார், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக  அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
வர்த்தக மூலங்களின்படி, தமிழ்நாட்டுக்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரம், கர்நாடகம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த  3 மாநிலங்கள் தமிழ்நாட்டின் மக்காச்சோளத் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன. கர்நாடகத்தில் இருந்து வரும் வரத்து செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். ஆந்திரம், பிகாரில் இருந்து வரத்து அக்டோபர் மாதத்தில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவு வரத்தானது அரியலூர், பெரம்பலூர், தேனி, கோவில்பட்டி, கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து டிசம்பரில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்து ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 கோழித் தீவனத்தில் மக்காச்சோளம் முக்கியப் பங்கு வகிப்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மக்காச்சோளம் விளையும் முக்கிய மாநிலங்களில் படைப்புழுவின் தாக்கத்தால் முந்தைய மாதங்களில் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்பட்டது. 
தற்போது பருவ மழை காரணமாக படைப்புழுவின் தாக்கம் குறைந்து பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. எனவே உற்பத்தியும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
கர்நாடகத்தில் இருந்து வரத்து ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் அது போதுமானதாக இருப்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 

அந்த ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது (நவம்பர் - ஜனவரி) படைப்புழுவின் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையெனில் குவிண்டாலுக்கு ரூ. 1,800 முதல் ரூ.2,000 வரையே இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம்.
 இது தொடர்பான மேலும் விவரங்களை, உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, சிறு தானியத் துறைத் தலைவரையோ நேரில் 
அணுகியோ அல்லது 0422-2431405, 2450507 என்ற தொடர்பு எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com