மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு

அறுவடை செய்யும் மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு

கோவை: அறுவடை செய்யும் மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
மிளகாய் அதன் காரத்தன்மை, நிறத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மிளகாயில் சோடியம், கொழுப்பின் அளவு குறைவாகவும், வைட்டமின் ஏ, சி, ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை அதிகமாகவும் உள்ளன.
மிளகாய் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. மிளகாய் உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய மசாலா வாரியத்தின் கணக்கெடுப்பின்படி 2018-19-ஆம் ஆண்டில் இந்தியாவில் 7.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு 16.89 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய மிளகாயின் நிறம், காரத்தன்மை காரணமாக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலிருந்து சீனா, வியத்நாம், தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு மிளகாய் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, கரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவுக்கான மிளகாய் ஏற்றுமதி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்து, வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில், ஆந்திரம் (49 சதவீதம்), கர்நாடகம் (18 சதவீதம்), மகாராஷ்டிரம் (6 சதவீதம்), தமிழகம் (3 சதவீதம்) ஆகியவை மிளகாய் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் 2018-2019-ஆம் ஆண்டில் 46,873 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு 21,693 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குண்டு, சன்ன ரகம் மிளகாய்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் முண்டு ரகமும், சிவகங்கை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சன்ன ரகமும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. மிளகாய் அதிக அளவில் விளைவிக்கும் மாவட்டங்களில் பொதுவாக அக்டோபர் மாதத்தில் விதைப்பு நடைபெறுகிறது.
இந்தியாவில் மிளகாய் சந்தைக்கு வரத்தானது நவம்பர் முதல் மே வரை இருக்கும். நவம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசம், கர்நாடகத்திலிருந்தும் அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் மிளகாய் வரத்து உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, விருதுநகர் சந்தைக்கு மார்ச் முதல் மே வரை அதிகமாக வருகிறது.
தமிழகத்தில் ஒருபோகம் பயிர் சாகுபடி நடைமுறையில் உள்ளது. எனவே வியாபாரிகள் மிளகாய் அறுவடையின்போது, அதிக அளவில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதற்கான தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் - ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மிளகாய் விலை, சந்தை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மிளகாயின் பண்ணை விலை (2020 மார்ச் முதல் செப்டம்பர் வரை) கிலோவுக்கு ரூ.160 முதல் 170 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என்றும், இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வாசனை - நறுமணப் பொருள்கள் துறைத் தலைவரை 0422-2431405, 6611284 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com