பெங்களூரில் நவ.12-ஆம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு சார்பில் பெங்களூரில் நவ.12-ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை வருங்கால வைப்புநிதி குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
ராஜாராம் மோகன்ராய் சாலையில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் அலுவலகம் (080-22230118), ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள துணை மண்டல அலுவலகம்(080-28603108), எலஹங்கா நியூடவுனில் உள்ள துணை மண்டல அலுவலகம் (080-28460842) ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படும்.
ராஜாராம் மோகன்ராய் சாலை, ராஜராஜேஸ்வரிநகர், எலஹங்காவில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் காலை 10.30 முதல் நண்பகல் 1 மணிவரை சந்தாதாரர்கள், மாலை 3 மணிமுதல் மாலை 4 மணிவரை நிறுவனங்கள், மாலை 4 முதல் மாலை 5 மணிவரை எல்லைக்குள்பட்ட பகுதியிலுள்ள விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களின் குறைகள் தீர்க்கப்படும்.
வருங்காலவைப்பு, ஓய்வூதியம் தொடர்பாக நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் குறைகளை சந்தாதாரர்கள் அல்லது உறுப்பினர்கள், தங்களுடைய பெயர், முகவரி, சரியான வைப்புநிதி குறியீட்டு எண், கணக்கு எண், தொழில் நிறுவனத்தின் விவரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, நவ.12-ஆம் தேதி நடக்கும் குறைதீர் முகாம்களில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.