அரசியல் லாபத்திற்காக ஒரு தேர்தலில் போட்டியிட்டு பிறகு ராஜிநாமா செய்வதால் குறைந்த காலத்திற்குள் மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாவதாக கர்நாடக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ் சதம் குற்றஞ்சாட்டினார்.இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் நவ. 4-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எஸ்.எடியூரப்பா, ஸ்ரீராமுலு, புட்டராஜ் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் மக்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில், காலியாக உள்ள இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது. எனவே, அரசியல் லாபத்திற்காக மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதை மக்கள் கண்டித்து, சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களின் முன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியிலிருக்கும் போது மீண்டும் மற்றொரு தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையமும் தடை விதிக்க வேண்டும் என்றார்.