நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பாரம்பரிய கலை, கலாசாரங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நடிகர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மையத்தில் வெள்ளிக்கிழமை இளைஞர், கலை, கலாசார விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தனி மரியாதை, கெளரவம் உள்ளது. இதற்கு நமது நாட்டின் கலை, கலாசாரம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுவாமி விவேகானந்தர் போன்றவர்களால் நமது கலாசாரம் வெளிநாடுகளில் பரவியுள்ளது. நமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை மாணவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதற்கு இதுபோன்ற கலை, கலாசார விழாக்கள் உறுதுணையாக இருக்கும். நமது முன்னோர்கள் நமக்கு பாரம்பரியமுள்ள கலை, கலாசாரங்களை விட்டுச் சென்றுள்ளனர். அதனை நாம் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும். கலை, கலாசாரத்தைக் கொண்டே அம்மக்களின் வாழ்வியல் செழுமையைக் கண்டறிய முடியும் என்றார். நிகழ்ச்சியில் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மையத்தின் முதல்வர் ஆர்.மஞ்சுநாத், கிருஷ்ணதேவராயா கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஷ்யாம்ராஜு, எல்.கே.ராஜு, ஆனந்தராஜு, திரைப்பட இயக்குநர் யோகராஜ்பட், நடிகர் விஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.