விவசாயிகள், ஏழைகளின் நலனுக்காக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், தார்வாட் மக்களவைத் தொகுதிக்கு 2-ஆம் கட்டமாக ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி செய்தது. பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பணமதிப்பிழப்பு, சமையல் எரிவாயு விலை உயர்வு, சரக்கு சேவை வரி உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மக்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பாஜக ஆட்சியில் விவசாயிகள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கரும்பு பணத்தை, வங்கி கணக்குகளில் போடப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அவர்கள் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, விவசாயிகள், ஏழைகள் நலனுக்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.