ஸ்கூட்டர் மீது மினி லாரி மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு குருபரஹள்ளியைச் சேர்ந்தவர் ரேகா. இவரது மகள் தேஜஸ்வினி (11), மகன் சரண் (7). மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேஜஸ்வினியும், சரணும் படித்து வந்தனர்.
புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின்னர் இருவரையும் ரேகா ஸ்கூட்டரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாராம். சோப் தொழிற்சாலை அருகே பின்புறத்திலிருந்து வேகமாக வந்த மினி லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த தேஜஸ்வினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ரேகா, சரண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லேஸ்வரம் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.